Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -மிதுனம்




குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
+ கஷ்டம் தீர்ந்தது
- வீண் பழி
நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மிதுனராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசி, ராசிக்கு 3,5ம் இடங்களை பார்க்கிறார்.இந்த குருபெயர்ச்சி கடந்த காலத்தில் இருந்த கஷ்டநிலைமையை மாற்றும். உங்களின் இப்போதைய முயற்சி வெற்றியடைந்து குடும்பத்தில் வளமையும், சந்தோஷமும் நிறைந்திட வழி ஏற்படுத்தி தரும். மனதில் இருந்த தயக்கம் விலகும். பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். இளைய சகோதரர்கள் வாழ்வில் முன்னேறி உங்களுடன் இணக்கமாக செயல்படுவர். புதியவீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு.புத்திரர், பெற்றோர் சொல்கேட்டு நடந்து படிப்பில் முன்னேற்றம் பெறுவர். பூர்வ சொத்தில் வருமானம் அதிகரிக்கும். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். கடன்களை பெருமளவில் அடைப்பீர்கள். வழக்கு, விவகாரம் தொந்தரவு தராத இனிய வாழ்க்கைமுறை உருவாகும். குருவின் அதிசார காலமான மே முதல் ஜூலை மத்தி வரையில் வீண்பழி உண்டாக வாய்ப்புண்டு. இதையடுத்து வரும் வக்ரகதி காலத்திலும் நவம்பர் வரை மனைவி வழியில் மருத்துவச் செலவு உண்டாக வாய்ப்புண்டு.கணவன், மனைவி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்வர். நண்பர்களிடம் சிறப்பான நட்புறவு இருக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பில் வளர்ச்சியும், முன்னேற்றமும் உண்டு. சுபநிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள்.
தொழில்: கல்வி, நிதிநிறுவனம், ஓட்டல், லாட்ஜ், மருத்துவமனை, சுற்றுலா நிறுவனம், டிராவல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், கட்டுமானப்பொருள், இரும்பு, காகிதம், தண்ணீர் சார்ந்த தொழில் செய்பவர்கள் தாராள லாபம் பெறுவர். மற்றவர்களுக்கும் ஓரளவு லாபமே. பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக கிடைக்கும்.
வேலை: அரசு மற்றும் தனியார்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சக பணியாளர்கள் அன்புடன் நடந்து கொள்வர். குடும்பத்தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரம்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை, காகிதம், உணவு பண்டங்கள், பர்னிச்சர், ரெடிமேட் ஆடை, மருந்து, பூஜை பொருட்கள், தண்ணீர் சார்ந்த பொருட்கள், பாத்திரம், தானிய வகைகள், விற்பவர்கள், அபரிமிதமான வளர்ச்சி காண்பர். லாபம் அதிகரிக்கும்.சரக்கு வாகனங்களாலும் லாபமே. வியாபாரம் சார்ந்த சங்கங்களில் சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பணிஉயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்ற சலுகைகளை எளிதாகப் பெறுவர். பணியிடத்தில் சுமூகநட்பு இருக்கும். குடும்ப பெண்கள், குடும்பத்தின் எதிர்கால தேவைகளை கணவரின் உதவியுடன் நிறைவேற்றுவர். புத்திரர்களை நல்லவிதமாக வளர்த்து படிப்பில் முன்னேற்றம் பெறச் செய்வீர்கள். தாய்வீட்டு உதவி ஓரளவுக்கு கிடைக்கும். ஆபரண சேர்க்கை உண்டு. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள், கூடுதல் மூலதனத்துடன் தொழிலை அபிவிருத்தி செய்வர். வியாபாரம் சிறந்து உபரி வருமானம் கிடைக்கும்.
படிப்பு: மருத்துவம், வங்கியியல், சட்டம், விவசாயம், ரசாயனம், இன்ஜினியரிங், இசை, ஆராய்ச்சி, ஆசிரியர் பயிற்சி, இலக்கியம், தத்துவம், ஜானலிசம், கேட்டரிங், அனிமேஷன், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள், தரத்தேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணவசதி சீராக இருக்கும். தந்தையுடன் பாசம் அதிகரிக்கும். சுற்றுலா பயண வாய்ப்பு உருவாகி நிறைவேறும். சகமாணவர்களுடன் நட்பு சீராகும்.
அரசியல்வாதி: அரசியல்வாதிகள் ஆர்வமுடன் செயல்படுவர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசு அதிகாரிகள் மனம் உவந்து உதவுவர். பதவிப்பொறுப்பு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். புத்திரர்களுக்கும் அரசியலில் புதிய முகவரி உருவாகும். எதிரிகளின் தொல்லை படிப்படியாக குறையும்.
விவசாயம்: விவசாயிகள், பயிர்வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெறுவர். மகசூல் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் குறைந்த அளவில் அனுகூலம் ஏற்படும். கூடுதல் நிலம் வாங்க யோகம் உண்டு.
வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி.
பரிகாரப் பாடல்
கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை
ஆறங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்.

No comments:

Post a Comment