Oct 12, 2010

மேஷராசி அன்பர்களே! சனி பெயர்ச்சி

மேஷ ராசியில் பிறந்த நீங்கள் கம்பீரமான தோற்றமும் நடுத்தர உயரமும் கொண்டவராக இருப்பீர்கள். எதையும் கண்டுகொள்ளாதவர் மாதிரி தெரிந்தாலும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் அக்கறையும் நிரம்பியவர்கள். சுற்றுச் சூழலைக் கூர்ந்து கவனிக்கும் சக்தியும் கொண்ட வர்கள். உடம்பில் முகத்தில் கைகளில் அல்லது தொடையில் மச்சம், தழும்பு அல்லது வடுக்காயம் இருக்கும். எல்லா விஷயத்திலும் பொதுஅறிவு இருக்கும். அதனால் பிறர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றித் தெரிந்திருக்கும் ஞானம் உடையவர்கள். பலரிடமும் அபிப்பிராயமும் ஆலோ சனையும் கேட்டாலும் எந்த ஒரு காரியத்திலும் சொந்த விருப்பம் என்று ஒன்று இருக்கும். அதன்படியே செயல்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் மறைத்துப் பேசத் தெரியாது. எதுவானாலும் நேருக்கு நேர் கூறும் பழக்கம் உடையவர்கள். அதனால் மற்றவர்களின் விமர்சனங்கள் ஏற்பட்டாலும் அதைப் பற்றித் துளியும் கவலை கொள்ளமாட்டீர்கள்.


உங்களிடம் அன்பும் பாசமும் கொண்டவர்களுக் காக எந்தத் துன்பம் வந்தாலும் தாங்கிக் கொண்டு அவர்களுக்காக வாதாடி சாதனை படைப்பீர்கள். ஒரு காரியத்தை உங்களை நம்பி ஒப்படைத்தால் அதை வெற்றியோடு செயல்படுத்தி முடிக்கும்வரை ஓயமாட் டீர்கள். அதேசமயம் சாமான்யமாக எந்த ஒரு பொறுப் பையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் திறனுடைய நீங்கள் உங்களையே புரிந்து கொள்ள முடியாதவர் களாகவும் இருப்பீர்கள். தெய்வ வழிபாடு இருந்தாலும் சில விஷயங்களில் பலவீனமான பழக்க - வழக்கத்துக்கு அடிமையாகவும் இருப்பீர்கள். கொஞ்சம் நெருங்கிப் பழகியவர்களை நம்பி பணவிரயம் செய்து முடிவில் பகை, விரோதம் ஆகிவிடும். பூர்வீகச் சொத்து இருந்தும் பயன்படாது. விரயம் ஆகலாம். பிள்ளைகள் ஆதரவாலும் அவர்தம் சம்பாத்தியத்தாலும் சொத்து சுகங்களைத் தேடிக் கொள்ளவும்- அனுபவிக்கும் யோகமும் அமையும். சிலர் பூர்வீக எல்லையை விட்டு இடம் மாறி வாழலாம். சிலகாலம் வாடகை வீடு பிறகு ஒத்தி வீடு அப்புறம் சொந்த வீட்டில் வாழும் யோகமும் உண்டு. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடித்தான் முன்னுக்கு வரவேண்டிய நிலை!



எப்போதும் ஏதாவது சிந்தனையிலேயே இருப்பீர்கள். அதனால் மூளை நரம்புகளில் சில தொல்லைகள் ஏற்படலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவீர்கள். பணவிரயத்தைத் தவிர மற்ற வகைகளில் கவலை இராது. எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கென்று செலவு வந்துவிடும். உங்களுடைய பேச்சால் மற்றவர்களை வசியப் படுத்துவீர்கள். உங்கள் வாக்கை மற்றவர்கள் தெய்வ வாக்காக- தேவ வாக்காக மதித்து மரியாதை செய்வார்கள். தாய் - தகப்பனார் உறவு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழலாம்; அல்லது அவர்களை விட்டு நீங்கள் பிரிந்து வாழலாம். சகோதர வகையிலும் ஆதரவு, அனுசரணையை எதிர்பார்க்க முடியாது. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாகச் செயல்பட வேண்டும்.

உங்களது ராசிக்கு இதுவரை 5-ல் இருந்த சனி இப்போது ஆறாம் இடத்துக்கு வருவது யோகம்தான். கன்னியில் நிற்கும் சனி 3-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும்; 10-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும் பார்க்கப் போகிறார்.

சிலருக்கு உடல்நலக் குறைவும் நரம்பு அல்லது உஷ்ண சம்பந்தமான கோளாறுகளும் ஏற்படலாம். தாய் அல்லது தாய் வகையில் மனச்சஞ்சலங்களும் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். மனதிற்குள் இனம்புரியாத பயமும்- தொழில் அல்லது வேலையில் சிறுசிறு பிரச்சினைகளும் உண்டாகி கவலை ஏற்படுத்தலாம். வீடு, வண்டி வாகனம் ஆகியவற்றில் பழுதுகளும் பராமரிப்புச் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. மனதில் ஏதேனும் ஒரு கவலை குடிகொண்டிருக்கும். அதனால் மனச்சோர்வு உண்டாகி உடலில் தெம்பு இல்லாமல் வித்தியாசமாகக் காட்சி அளிப்பீர்கள்.

ஐந்தில் இருந்த சனி பகவான் உங்களது கௌரவத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் காப்பாற்றி வந்தார். உங்களது கௌரவத்தையும் மதிப்பையும் காப்பாற்றிக் கொள்ள சில சமயம் தவிர்க்க முடியாத செலவுகளையும் செய்யும் அவசியம் ஏற்பட்டது. குடும்பத்தில் ஏற்பட்ட வைத்தியச் செலவுகளையும் சமாளித்தீர்கள். எடுத்த காரியத்தில் சில தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டாலும் விடாமுயற்சி செய்தீர்கள். நம்பிக்கை தளரவில்லை. உறவினர்களின் விமர்சனங்களையும் கண்திருஷ்டி, பொறாமை போன்றவற்றையும் தொல்லைகளையும் தாங்கிக் கொண்டீர்கள்.

இப்போது 6-ஆம் இடத்துக்கு வந்துள்ள சனி பகவான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீங்கள் எடுத்துக் கொண்ட கடின முயற்சி களுக்கும் உழைப்புக்கும் வெற்றியைத் தேடித் தந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார். எடுத்த காரியங்கள் எல்லாம் இனிது நிறை வேறும். தொடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றிபெறும். தொட்டது துலங்கும். பட்டது துளிரும்.

6-ஆம் இடம் நோய், வைத்தியச் செலவு, எதிரிகளைக் குறிக்கும் இடம். அங்கு சனி வருவதால் உடல்நலனில் சிற்சில தொந்தரவுகள் இருந்தாலும், அதற்காக செலவு செய்து நோயை நீக்கி சுகத்தை அடைய லாம். அதேபோல எதிரிகளையும் எளிதாக வெற்றி கொள்ளலாம். எதிரிகளே உங்களைக் கண்டு பயப்படும் அளவு பலவீனமாகிவிடுவார் கள். கடன் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றையும் தீர்த்து விடலாம். வம்பு வழக்கு - கோர்ட் கேஸ் ஆகியவை இருந்தாலும் அவற்றிலும் உங்களுக்குச் சாதகமான முடிவுகளே அமையும்.

குடும்பத்தில் இருந்துவந்த மருத்துவச் செலவினங்களும் நீங்கி குடும்பத்தார் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நலமுடன் இருப்பார்கள். குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். அனைவரும் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். பணவரவும் அதிகரிக்கும். கையில் தாராளமாகப் பணப் புழக்கம் இருக்கும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி அலங்கரிக்கலாம்.

உங்களிடம் உதவிபெற்று உங்கள் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு, வெளியே போனவுடன் உங்களை எப்படிக் கவிழ்க்கலாம் என்று சதித்திட்டம் போடுகிறவர்களைச் சனி பகவான் சரியானபடி தண்டித்துவிடுவார். நீங்கள் உயர்நிலையை அடையும்போது உங்களுக்கு உண்மையானவர்கள் மட்டுமே உங்கள் அருகில் இருப்பார்கள். உங்களுக்குத் துரோகம் செய்தவர்கள் உங்கள் நிழலைக்கூட காணமுடியாதபடி ஒதுங்கிப் போய்விடுவார்கள்.



உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சிலருக்கு கேட்ட இடத்தில் இடமாற்றமும் அமையும். தொழில் அல்லது வேலையில் அலைச்சல் இருக்கலாம். அலைச்சலுக் குத் தகுந்த ஆதாயமும் இருக்கும். அப்படி அலைச்சல் இருந்தால் அதுவும் ஒரு நன்மைக்கே என்று கருத வேண்டும். உங்களுடைய நீண்ட காலக் கனவுத் திட்டங்கள் ஒவ்வொன்றாக வெற்றியடையும். இதற்கு முன்பிருந்த ஆத்திரமும் அவசரமும் பதட்டமும் இனி இருக்காது! நிதானமும் பொறுமையும் கொண்டு விவேகமாகச் செயல்படுவதால் வெற்றி உங்களைத் தேடிவரும்.

பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முன்பைவிட இனி அதிக மதிப்பெண் பெற்று பெருமை சேர்ப்பார்கள்.

இளைய சகோதரர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படலாம். அவர்களுக்கு வயிறு, கிட்னி, கண் சம்பந்தமான கோளாறுகள் உண்டாகலாம். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தானாகவே வந்து தங்களிடம் உதவி கேட்டு நிற்கலாம். எதையும் தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது பொதுவிதி என்றாலும், பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்பதும் விதிதான்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் நன்மையும் உதவியும் கிடைக்கும். கேட்ட இடத்தில் தாராளமாகப் பணமும் கடனும் கிடைக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தலாம் அல்லது புதிய கூட்டாளிகளைச் சேர்க்கலாம். சுபமங்கள விரயச் செலவுகளும் உண்டா கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலருக்கு தெய்வ ஸ்தலங்களுக்குப் புனிதப் பயணம் செய்யும் யோகமுண்டாகும். குலதெய்வம் எதுவெனத் தெரியாமல் இருப்பவர்களுக்குக்கூட குலதெய்வ விவரம் தெரிய வரும். குலதெய்வ இருப்பிடம் போக முடியா விட்டாலும் இருக்கும் இடத்திலேயே சுவரில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வழிபட்டாலும் வாழ்க்கையில் வளமும் நலமும் உண்டாகும்.



உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2009- செப்டம்பர் முதல் பத்து மாத காலம் சனி பகவான் மேஷ ராசிக்கு 5-க்குடைய சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பார். ஜாதக தசா புக்தி கள் யோகமாக இருந்தால் உங்களது திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறை வேறும். நீண்ட கால கனவுகளும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் மனத் திருப்தியும் நிறைந்திருக்கும். நீங்கள் கடன் கொடுத்து நீண்ட காலம் வராமல் இருந்த பணம் வசூலாகும். அன்னிய இனத்த வரால் உதவியும் லாபமும் உண்டாகும். சிலசமயம் உங்கள் வளர்ச்சி யைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படலாம். கண் திருஷ்டிக்கு ஆளாகலாம். அதற்காகத் தேவையான பரிகாரம் செய்து கொள்ளவும். ராஜாங்க காரியங்களிலும் அனுகூலமான பலனை எதிர்பார்க்கலாம்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜுலை முதல் 14 மாதகாலம் சனி பகவான் மேஷ ராசிக்கு 4-க்குடைய சந்திரன் சாரத்தில் சஞ்சரிப்பார். ஜாதக தசா புக்திகள் பாதகமாக இருந்தால் தாயாரின் உடல்நிலை அல்லது தாய் வர்க்கத்தில் பீடை பிணி வியாகூலம் அல்லது குடும்பத்தில் வைத்தியச் செலவு போன்ற சங்கடங்கள் உண்டாகும். பூமி,வீடு, வாகனம் சம்பந்தமான ஏமாற்றமோ வீண் விரயமோ உண்டாகலாம். ஜாதக தசா புக்திகள் யோகமாக அமைந்தால் பூரண உடல்நலம், கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம், பூமி, வீடு, வாகன யோகம், சுப முதலீடு உண்டாகும். தாயின் ஆதரவையும் தாய்மாமன் உதவியையும் எதிர்பார்க்கலாம். சிலர் கடல் கடந்த பயணத் திட்டத்தையும் சந்திக்கலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011- செம்டம்பர் முதல் ஆறு மாதகாலம் கன்னிராசியில் சித்திரை நட்சத்திரத்தில் முன்பகுதி 2-ஆம் பாதம் வரை சனி சஞ்சாரம் செய்வார். ராசிநாதன் செவ்வாயின் சாரம் பெறுவதால் உங்களுடைய கௌரவமும் மதிப்பும் கூடும். சில காரியங்களில்- சில விஷயங்களில் முதலில் பிரச்சினைகள் உருவானாலும் பின்னால் அனுகூலமாகவும் நன்மையாக வும் முடியும். செவ்வாய் ராசிநாதன் என்பதோடு அட்டமாதிபதியும் ஆவார் என்பதால், சிலருக்கு இடப் பெயர்ச்சி அல்லது ஊர் மாற்றம், வேலை மாறுதல் உண்டாகலாம். அலைச்சலும் அதிகப் பிரயாசையும் ஒருபுறம் இருந்தாலும் அதனால் ஆதாயமும் நன்மையும் உண்டாகும். கடன் சுமையைக் குறைத்துவிடலாம்.

அசுவதி நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி கடன்களையும் உருவாக்கி கனவுகளையும் நனவுகளாக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும். பூமி, வீடு, வாகன யோகம் அமையும். போட்டிகளில் வெற்றி உண்டாகும். வைத்தியச் செலவுகளுக்கு விடுதலை கிடைக்கும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி மகிழ்ச்சியையும் மனம் நிறைந்த வாழ்க்கையையும் தரும். இதில் பிறந்த பெண்களுக்கு புத்திர யோகமும் வாரிசு யோகமும் உண்டாகும். பூமி, வீடு, வாகன சம்பந்தமான யோகமும் அமையும். சிலருக்கு இடமாறுதலை ஏற்படுத்தும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி தொழில், வாழ்க்கை இரண்டிலும் நல்ல முன்னேற்றம் தெரியும். சில நேரங்களில் பொருளாதாரத்தில் பற்றாக் குறை ஏற்பட்டாலும் கடன் உடன் கைமாற்று வாங்கி சமாளித்து விடலாம். பயணங்களினால் பலன் உண்டாகும்.

பரிகாரம்

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகில் கிருஷ்ணாபுரம் சென்று ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயருக்கு படிப்பாயச பூஜை செய்யவும். ராஜபாளையம் - தென்காசி பாதையில் கிருஷ்ணாபுரம் உள்ளது.

No comments:

Post a Comment