Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -ரிஷபம்




குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2
+ குழந்தைகளால் பெருமை
- பதவிக்கு ஆபத்து
இனிமையாகப் பேசி அனைவரையும் கவரும் ரிஷப ராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 2,4,6ம் இடங்களைப் பார்க்கிறார். இந்த பெயர்ச்சி தொழில் சார்ந்த வகையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பத்தில் குரு, பதவிக்கு இடர் என்பது ஜோதிட மொழி.இருப்பினும் குருபார்வை பெறுகிற ஸ்தானங்களில் இருந்து ஓரளவு பலன்களை பெறுவீர்கள். பணவரவு ஓரளவுக்கு இருக்கும். கண் தொடர்பான குறையுள்ளவர்களுக்கு பார்வைத்திறன் வளர்ச்சி பெறும். சகோதர, சகோதரிகளின் உதவி கிடைக்காது. வீடு, வாகன பராமரிப்பு செலவுக்காக கடன் வாங்க வேண்டி வரும். தாயின் அன்பும், பாசமும் ஓரளவுக்கே கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் தொல்லை உண்டாகும். புத்திரர்கள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் பெறுவர். அவர்களால் உங்களுக்கு பெருமை உண்டாகும். பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு சராசரிக்கும் குறைவான பணவரவு கிடைக்கும். நோய் தொந்தரவு விலகி ஆரோக்கியம் பெறுவீர்கள். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். நண்பர்கள் உதவும் மனப்பான்மையுடன் செயல்படுவர். வெளிநாடு வேலைவாய்ப்புக்கு முயற்சிப்பவர்களுக்கு நிலைமை சாதகமாக இல்லை. ஏற்கனவே பணிசெய்பவர்களுக்கும் வருமான நிலையில் அனுகூலம் அதிகமில்லை.
தொழில்: தொழிலதிபர்கள் கூடுதல் உழைப்பும், தகுந்த கவனமும் கொண்டால் மட்டுமே ஓரளவு லாபம் கிடைக்கும். டெக்ஸ்டைல்ஸ், தோல், சணல், காகிதம், இரும்பு, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், தண்ணீர் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் பிறர் பொறுப்பில் தொழிலை விட்டு வைப்பது நல்லதல்ல. போட்டி பெரிய அளவில் இடையூறு தராது. திறமைமிக்க பணியாளர்களை ஊக்கப்படுத்துவதால் உற்பத்தியில் வளர்ச்சியும், தரமும் அதிகரிக்கும். லாபம் சுமார் தான். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவு கையைக் கடிக்கும்.
வேலை: அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் கவனக்குறைவு காரணமாக வேலையில் ஏதாவது தவறு செய்யக்கூடும். இதன் காரணமாக நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். சிலர் பதவியை இழக்கும் நிலை வரலாம். சலுகைகளை அதிகம் எதிர்பார்க்க இயலாது. கூடுதல் நேரம் பணிபுரிவதால் மட்டுமே பணத்தேவை பூர்த்தியாகும்.
வியாபாரம்: ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், ஜவுளி, பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உணவு பண்டங்கள், ஸ்டேஷனரி, பேக்கரிபொருட்கள், நகை, பலசரக்கு வியாபாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இருக்கிற வியாபாரத்தை தக்க வைக்க முடியும். பிற பொருட்களை விற்பவர்கள் ஓரளவு லாபமடைவர்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள், பொறுப்புணர்ந்து செயல்படுவது முக்கியம். மந்தநிலை காரணமாக பணியில் தாமதம் ஏற்பட்டு அதிகாரிகளின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வரும். சிலருக்கு இடமாற்றம், பொறுப்பு மாற்றம் போன்றவை இருக்கும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்குரிய தொகை சரிவர கிடைக்காமல் அவதிப்படும் நிலை வரலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால் தகுந்த ஓய்வு தேவை. தொழில், வியாபாரம் நடத்தும் பெண்களுக்கு அதிக வியாபாரம் இருக்காது.
படிப்பு: இன்ஜினியரிங், ஜர்னலிசம், சட்டம், மருத்துவம், விவசாயம் சார்ந்த துறைகளில் படிக்கும் மாணவர்கள் உயர்ந்த தேர்ச்சி பெற குருகிரக பார்வை அனுகூலமாக உள்ளது. சகமாணவர்கள் சுமூகநட்பு பாராட்டுவர். படிப்புக்காக வங்கிகளில் கடனுதவி கேட்டவர்களுக்கு கிடைத்து விட வாய்ப்பிருக்கிறது.
அரசியல்: அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களின் ஆதரவை இழக்கக்கூடும். அதை தக்க வைக்க வேண்டுமானால் அளவுக்கதிகமாக செலவாகும். தொழில் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பில்லை. புதியவர்களை நியமிப்பதால் கூடுதல் செலவும் ஏற்படும்.
விவசாயம்: விவசாயிகளுக்கு அளவான மகசூலும், கால்நடை வளர்ப்பில் தாராள பணவரவும் கிடைக்கும். நிலம் தொடர்பான சிரமம் இருந்தால் விலகும். உழவுக்கருவிகள் பழுதாகி பராமரிப்பு செலவுக்கு வழிவகுக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
பரிகாரப் பாடல்
உடையாளை ஒல்கு செம்பட்டு
உடையாளை ஒளிமதி
செஞ்சடையாளை வஞ்சக நெஞ்சு
அடையாளை தயங்கும் நுண்ணூல்
இடையாளை எங்கள் பெண்மான்
இடையாளை இங்கு என்னை இனி
படையாளை உங்களையும்
படையாவண்ணம் பார்த்திருமே!

No comments:

Post a Comment