Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -கடகம்




குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
+ ஓரளவு பணவரவு
- சட்ட சிக்கல் வரலாம்
நல்ல எண்ணங்களால் உயர்ந்து நிற்கும் கடகராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி, உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு, 12,2,4 ம் இடங்களை பார்க்கிறார். இந்த குருபெயர்ச்சி உங்கள் வாழ்வில் சில சிரமமான பலன்களை உருவாக்கும் வகையில் உள்ளது. ஆனாலும், குருபகவானின் பார்வைகளை பெறுகிற இடங்களின் வழியாக ஓரளவு நன்மை கிடைக்கும். பணவரவு அதிகம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது. இளைய சகோதரருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். வீடு, வாகன வகையில் தற்போதைய நிலை தொடரும். புத்திரர்கள் உங்கள் சொல்கேட்டு நடப்பர்.
பூர்வ சொத்தில் இடைத்தரகர்களால் வருமானம் குறையும். வாகனங்களை இயக்கும்போது மிதவேகம் அவசியம். நெருப்பு, மின்சாதனங்களை கையாளும் போது கவனம் அவசியம். உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. கவனம். வழக்கு விவகாரம் சாதகமாக இராது. கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படும். நண்பர்களும் உங்களை எதிர்த்து நிற்கும் நிலை வரலாம். வெளிநாடு வேலைவாய்ப்பில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். ஏழரைச் சனி கழிந்து விட்டதால் குருவால் ஏற்படும் சிரமங்களின் தன்மை குறைவாகவே இருக்கும்.
தொழில்: தொழில் சார்ந்த வகையில் இருக்கிற அனுகூலத்தை தக்கவைப்பதே எதிர்கால பாதுகாப்பிற்கு உதவும். வாகனம், மின்சார, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், இரும்பு, காகிதம், டெக்ஸ்டைல்ஸ் அதிபர்கள், லாட்ஜ், கல்விநிறுவனம், நிதி நிறுவன அதிபர்கள் ஓரளவு லாபம் பெறுவர். மற்றவர்களுக்கு பரவாயில்லை என்ற நிலை உள்ளது. நிர்வாகச்செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
வேலை: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணியில் குளறுபடி காரணமாக ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட வேண்டிய சூழ்நிலை வரும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் குறைய வாய்ப்பிருக்கிறது. சக பணியாளர்களுடன் விவாதம்கூடாது. சிலருக்கு பணியிட மாற்றம் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் குடும்பத்தில் பணநிலையில் பாதிப்பு வரலாம்.
வியாபாரம்: நகை, ஜவுளி, கட்டுமானப் பொருட்கள், மளிகை, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்து, ரப்பர், தோல் பொருட்கள், எண்ணெய் வித்து, தண்ணீர் சார்ந்த பொருட்கள், கண்கண்ணாடி, இறைச்சி, மீன் வியாபாரிகள் ஓரளவே லாபமடைவர். பழைய கடன் வசூலாகும். சரக்கு வாகனத்தின் மூலமாக உபரிபணவரவு கிடைக்கும். எவருடனும் புதிய தொழில்களில் கூட்டுசேரவேண்டாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும், சலுகைகளை அவ்வளவு எளிதில் பெற இயலாது. குடும்பப் பெண்கள், வீட்டுச் செலவுக்கு திண்டாட வேண்டியிருக்கும். மாங்கல்ய ஸ்தானத்தில் குருபகவான் இருப்பதால் கணவரின் உடல்நலம் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் சுமாரான வியாபாரமும், குறைந்த லாபமும் பெறுவர். தங்க நகைகளை இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது. தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும்.
படிப்பு: மருத்துவம், சிவில், ஏரோநாட்டிக்கல், மரைன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் படிப்பு, பயோ கெமிஸ்டிரி, விவசாயம், கேட்டரிங், சட்டம் படிக்கும் மாணவர்கள், குருபகவானின் அனுகூல பார்வையினால் உயர்ந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்கள் இவர்களை விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். தந்தையிடம் கருத்து வேறுபாடு வரும்.
அரசியல்: அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் நடக்கும். புத்திரர்களின் செயல்பாடு அரசியல்பணியில் பெரிய அளவில் மாற்றத்தைத் தராது. எதிரிகளிடமும், வம்பு வழக்குகளிலும் முன்யோசனை நடவடிக்கை அவசியம்.
விவசாயம்: விவசாயிகள் பயிர்வளர்ப்பில் உரிய பாதுகாப்பு நடைமுறையை கவனமுடன் பின்பற்ற வேண்டும். கால்நடை பெருக்கமும், அதன் மூலம் கூடுதல் பணவரவும் கிடைக்கும். சொத்து தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது.
வணங்க வேண்டிய தெய்வம்: லட்சுமி தாயார்.
பரிகாரப் பாடல்
உலகளந்த திருமாலின்
வலமார்பில் உறைபவளே
உலகமெல்லாம் காத்துநிற்கும்
தேவி மகாலட்சுமியே!
உலகெங்கும் ஆட்சி செய்யும்
அஷ்ட லட்சுமியே! நிலையான
அருள் செல்வம் அருள்பவளே!
உன் பாதம் சரணடைந்தோம்
நலம் தருவாய் அம்மா!

No comments:

Post a Comment